தக்க காரணமின்றி நோன்பு நோற்காதவர்களுக்கான தண்டணைகள்
‘நோன்பு தொடர்பான 70 விஷயங்கள்’ என்ற நூலிலிருந்து…
மூல நூலாசிரியர்: அஷ்ஷெய்ஹ் முஹம்மது சாலிஹ் அல்-முனஜ்ஜித்
ஸியாம் (நோன்பு) என்பதன் விளக்கம்
ஸியாம் என்றால் அரபு மொழியில் தவிர்ந்திருத்தல் என்று பொருள்; இஸ்லாமிய மார்க்கத்தில், பஜ்ரு (அதிகாலை) முதல் சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களிலிருந்து, நோன்பு நோற்பதற்கான நிய்யத்துடன் (எண்ணத்துடன்) தவிர்ந்திருப்பதாகும்.
நோன்பின் சட்டம்
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை (ஃபர்ளு) என்பதில் உம்மத்தினர் ஏகோபித்த முடிவு கொண்டுள்ளனர், இதற்கான ஆதாரங்கள் குர்ஆன் மற்றும் சுன்னாவில் உள்ளன. அல்லாஹ் கூறுகிறான் (பொருளின் விளக்கம்):.
“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.”. [அல்-பகரா 2:183].
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இஸ்லாம் ஐந்து [தூண்கள்] மீது கட்டப்பட்டுள்ளது…”, அதில் ரமலான் நோன்பையும் குறிப்பிட்டார்கள். (புகாரி, அல்-பத்ஹ், 1/49).
தகுந்த காரணமின்றி ரமலான் நோன்பை விடுவது ஒரு கடுமையான பெரும் பாவமாகும்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் கண்ட கனவை விவரிக்கும்போது கூறினார்கள்:
“…நான் மலையருகே சென்றபோது, அங்கே உரத்த சப்தங்களைக் கேட்டேன். ‘இந்த சப்தங்கள் என்ன?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இது நரகவாசிகளின் ஊளைச் சத்தம்’ என்றார்கள். பின்னர் நான் [வேறொரு இடத்திற்கு] அழைத்துச் செல்லப்பட்டேன், அங்கே மக்கள் தங்கள் குதிகால் நரம்புகளால் தொங்கவிடப்பட்டிருப்பதையும், அவர்களின் வாயின் ஓரங்கள் கிழிக்கப்பட்டு இரத்தம் சொட்டிக்கொண்டிருப்பதையும் கண்டேன். ‘இவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இவர்கள் சரியான நேரத்திற்கு முன்பே, அதாவது இஃப்தார் நேரத்திற்கு முன்பே நோன்பை முறித்தவர்கள்’ என்றார்கள்”. (ஸஹீஹ் அத்தர்கீப், 1/420) .
அல்-ஹாபிஸ் அத்-தஹபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்,
“தகுந்த காரணமின்றி ரமலான் நோன்பை நோற்காதவன் விபச்சாரி அல்லது குடிகாரனை விட மோசமானவன் என்பது மூமின்களிடையே உறுதியாக நிறுவப்பட்டுள்ளது; அவன் ஒரு முஸ்லிம்தானா என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள், மேலும் அவனை ஒரு வழிகெட்டவன் மற்றும் பாவி என்று கருதுகிறார்கள்”.